'ஸ்வைன் ப்ளு' -சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை, சிறுவன் பலி
Posted by salavu deen on Wednesday, August 12, 2009
தமிழகத்திலும் பன்றிக் காச்சல் பீதி ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்காச்சல் நோய் தீவிரத்திற்கு நேற்று முன்தினம் மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் நேற்று சென்னை மாணவன் மற்றும் புனேயைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நோய் பாதிப்பிற்க்குள்ளானவர்கள் சென்னையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்நோயால் யாரும் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பலியான பள்ளி மாணவனின் மரணம், தமிழகத்தில் பன்றிக்காச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பலியாகியுள்ள மாணவன், வேளச்சேரியைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு வயது நான்கு எனவும் அறியப்படுகிறது. சேத்துப்பட்டில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவன் இன்று காலை இந் நோய் பாதிப்பால் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். பன்றிக்காச்சல் தீவிரம் காரணமாக சென்னையில் பல பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அதே சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகங்கள், இருமல் சளி காச்சல் ஆகிய நோய்குறிகள் காணப்படும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமெனவும், அத்தகைய மாணவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறும் பெற்றோர்களுக்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சலுக்கு சிறுவன் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து நாளை இதுதொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம்ஒன்றைக் கூட்டவுள்ளதாகவும் இக் கூட்டத்தில் நோய் பரவலைத் தடுக்கவும், இதுதொடர்பான சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கக்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.